விமானத்தின் இயந்திரங்களைத் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன்ஜினியரிங் நிறுவனமும் இணைந்து விமானத் துறையில் 242 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளன.
இந்த கூட்டு முயற்சி மூலம் சிங்கப்பூர் ஏரோ என்ஜின் சர்வீஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு முதல் விமானத் துறைக்கான பராமரிப்பு, பழுது, மறுசீரமைப்பு பணிகளின் செயல்பாடு 40 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.
இந்த முதலீட்டால் 500 பொறியியல் வேலைகள் உருவாக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏரோ என்ஜின் சர்வீஸ் கூறியது.
பிப்ரவரி 21ஆம் தேதி சிங்கப்பூர் ஆகாயக் காட்சி நடந்தபோது இது குறித்த பேச்சுவார்த்தகள் நடந்தது. அதன் பின்னர் பொருளியல் வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றுடன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
இதுபோன்ற முதலீடுகள் எப்போதாவது கிடைக்கும் அரிதான வாய்ப்பு, இதனால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிறுவனம் வளர்ச்சி பெறவும் சிறப்பாக செயல்படவும் இது உதவும் என்று சிங்கப்பூர் ஏரோ என்ஜின் சர்வீசின் தலைமை நிர்வாகி சைமன் மிடில்பிரோ கூறினார்.
உலக அளவில் விமானத் துறைக்கான பராமரிப்பு, பழுது, மறுசீரமைப்பு பணிகளை வழங்கும் பெரும் நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏரோ என்ஜின் சர்வீசும் ஒன்று. அந்நிறுவனத்தில் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
வேலைகள் தொடர்பான ஒப்பந்தத்தை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மேற்கொள்கிறது.
விண்வெளித் துறை வேலை வாய்ப்புகள் மற்றும் புதிதாக இத்துறையில் இணைந்தவர்களுக்குப் பயிற்சி போன்றவற்றை வேலை நியமன, வேலைத்தகுதி கழகம், என்டியுசி லேர்னிங்ஹப் இணைந்து செயல்படுத்தும்.